Monday, November 30, 2009

தென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 5)

பாங்காக் ஏர்போர்ட் ஆகட்டும் அல்லது கொரியாவின் சியோல், செங்க்வான் நகரங்களாகட்டும், நான் பார்த்த வரையில், துப்புரவுத் தொழிலாளர்கள் (ஆண் பெண் இரு பாலரும்) "நான் ஏழையாக இருக்கலாம். ஆனால் இது என் தொழில், கண்ணியமான ஒன்று" என்ற உணர்வு வெளிப்பட சுயமரியாதையுடன் தன் வேலையைப் பார்க்கிறார்கள்.(கிட்டத் தட்ட McDonalds இல் பணி புரியும் ஸ்வீப்பர் இளைஞர்களைப் போல்). நம்மைப் போல் சில தொழில்களைத் தாழ்ந்தவை என்று முத்திரை குத்தி அதனை அவர்களையும் முழுமையாக நம்பச் செய்து கூனிக் குறுக வைக்கும் கொடுமை அங்கு தென்படவில்லை.

'முன்னே பின்னே செத்தால்தான் சுடுகாடு தெரியும்' என்பது போல் சில உன்னதமான முதல் முறைத் தவறுகளைச் செய்தேன். கொண்டு போன மொத்த ரூபாயையும் டாலராக மாறி, மறுபடியும் அவற்றைக் கொரியன் வோனாக மாற்றித் திரும்ப வருகையில் மிச்சம் இருந்தவற்றை டாலராகவும் கடைசியில் ரூபாயாகவும் மாற்றியதில் கிட்டத்தட்ட 700 ரூபாய் கமிஷனிலேயே போனது! நண்பர்கள் சிலர் என்னிடமிருந்து வோன் பெற்றுக் கொண்டு டாலர் கொடுத்ததால் நஷ்டம் இந்த அளவோடு போயிற்று!

ஆறு நாட்களில் ஒரே ஒரு கொரிய வார்த்தைதான் கற்றுக் கொண்டேன் . "கன்சாமிடா " ('கந்தசாமிடா' போல் இல்லை ?!) என்றால் 'நன்றி' என்று அர்த்தம் . கன்சாமிடாவில் 'டா' வைக் கொஞ்சம் இழுத்துச் சொல்ல வேண்டும். பிளைட்டில் உள்ளே நுழையும்போது நம்மை வரவேற்கும் ஏர் ஹோஸ்டஸ் 'லப்ப லப்பா ' என்று ஏதோ சொல்கிறார் . கொரியன் மொழி தெரிந்தவர்கள் விளக்குங்கள் !

'கிம்' என்ற குடும்பப் பெயர் மிகவும் அதிகம் புழங்குகிறது . தெருவில் போகும் போது "Mr கிம் " அல்லது "Mrs கிம்" என்று குரல் கொடுத்தால் நிச்சயம் நூறு பேராவது திரும்பிப் பார்ப்பார்கள் !

தொடரை முடிக்கும் முன் ஒரு கொசுறுத்தகவல்! நான் போயிருந்த செங்க்வான் (பூசான்) நகரிலிருந்து ஜப்பானில் உள்ள, அணுகுண்டு விழுந்த (அது தானாகவேயா விழுந்தது?!) நாகசாகி கடல் தாண்டி சில நூறு கி.மீ. தூரம்தான்!

சினிமா விரும்பி

Tuesday, November 17, 2009

தென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 3)

லிமோசின் எனப்படும் சொகுசு பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர், லக்கேஜை டிக்கியில் எடுத்து வைப்பது எல்லாம் ஒரே ஆள்தான்! பஸ் கிளம்பும்போது கைடு போல் நம்மை வரவேற்கவும் செய்கிறார்! Hyundai, Daewoo, Samsung, LG என்ற நமக்குப் பரிச்சயமான கொரிய பெயர்கள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன . சென்னையில் உள்ள பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்து பச்சை மற்றும் நீல நிறங்களில் சியோல் நகரெங்கும் பரவிக் கிடக்கிறது.

சாப்பாட்டைப் பொறுத்த வரை சில அனுபவஸ்தர்கள் சொல்லி அனுப்பினார்கள். ஹோட்டலில் பிரேக்பாஸ்ட் , லஞ்ச் , டின்னர் எதுவாக இருந்தாலும் தலையில் தொப்பி போட்டுக் கொண்டு கையில் frying pan உடன் நிற்கும் குக்கிடம் நேராகப் போய் விடு; உனக்கு வேண்டுகின்ற ரைஸ், நூடுல்ஸ் மற்றும் காய்கறி ஐட்டங்களை எல்லாம் கையால் காண்பித்து ' No Meat' என்று தெளிவாகச் சொல்லிவிட்டு பிரை செய்து கொடுக்கச் சொல்லு; உன் பிரச்னை தீர்ந்தது என்றார்கள். இந்த அறிவுரையை காலை ஆம்லெட் முதல் கடைப் பிடித்தேன். மற்றவர்களை விட எனக்கு ஐந்து நிமிடம் அதிகமாகியதே தவிர மற்றபடி உணவு சுடச் சுடக் கிடைத்தது. மிகவும் உபயோகமான அறிவுரை. வாழ்க அந்த நண்பர்கள்! 'உலகம் சுற்றும் வாலிபனில்' நாகேஷ் திணறுவதைப் போல் மூங்கில் குச்சிகளோடு மல்லுக் கட்டாமல் போர்க், ஸ்பூன் உபயோகப் படுத்தியே சாப்பிட்டேன்!

Pepsi, Coke fountain களைப் போலவே சின்னச் சின்ன ஹோட்டலில் கூட Cass, Hite என்னும் கொரிய பியர் வகைகளுக்கும் fountain உள்ளது. ஒரு ஹோட்டலில் 'கிம்' எனப்படும் ஐட்டம் சைடு டிஷ்ஷாக வைக்கப் பட்டது. அது என்ன என்று சர்வரிடம் கேட்டுப் புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது. Sea, Sea என்று அந்த ஆள் சொல்ல Seafood ஆ ? என்று நான் திரும்பத் திரும்பக் கேட்கக் கடைசியில் அந்தப் பேக்கட்டே எனக்குக் காட்டப் பட்டது. அதில் Sea Weed என்று எழுதி இருப்பதைப் பார்த்ததும் சாப்பிட ஆரம்பித்தேன். கடுகெண்ணையில் வதக்கிய கருவேப்பிலை வடாம் போல் இருந்தது அந்தக் கடல் பாசி! வீட்டுக்கு இரண்டு சின்ன பேக்கட் வாங்கி வந்து விட்டேன்!

உலக மயமாக்கலின் வீச்சையும் தாக்கத்தையும் முழுமையாக உணர்ந்து கொண்ட அரசு , மக்கள். நான் போன எல்லா கவுண்டர்களிலும் response time மின்னல் வேகத்தில் பிரமிக்க வைத்தது. என்னைத் தேடி வந்து பேசிய ஒரு பேராசிரியர் 'எங்கள் மாணவர்கள் படித்து முடித்து இந்தியாவில் இந்தியக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர முடியுமா ?' என்று கேட்டார் . 'யோவ்! எங்க பசங்க வயத்துல அடிக்காதய்யா!' என்று சொல்லத் தோன்றியது. 'இந்தியாவிலேயே கொரிய கம்பெனிகள் பல உள்ளனவே, அவற்றில் சேரலாமே' என்று சொல்லி சமாளித்தேன் !

ஆங்கிலமே தெரியாமல் தன் துறையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. 30 - 40 வருடம் முன்னால் யாரோ ஒரு சிலர் பொறியியல் , மருத்துவம் மற்றும் பல துறைப் பாடப் புத்தகங்களையும் ஆங்கிலத்திலிருந்து கொரியனுக்கு மொழி பெயர்க்கும் கடினமான வேலையைச் செய்து முடித்திருக்க வேண்டும் . அப்போதுதான் இது சாத்தியமாகும் .தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது இவர்களுக்கு இருக்கும் அதீதப் பற்று நம்மவர்களுக்கு (தமிழராகட்டும், ஹிந்திக்காரர்களோ அல்லது மற்றவரோ ஆகட்டும் ) உண்டா என்றால் பதில் சொல்லத் திணற வேண்டியிருக்கும்.

பாங்காக்கில் நான் Transit இல் இருந்த போது எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே தலைப்புச் செய்திதான். ராகேஷ் சக்ஸேனா என்ற இந்தியாவில் பிறந்த தொழிலதிபர் 1995 இல் ஒரு பெரிய வங்கி ஊழலில் சிக்கி, கனடாவுக்குச் சென்று அங்கே 13 வருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப் பட, நீண்ட போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாக அவரை தாய்லாந்துக்கு அன்றுதான் extradition செய்திருந்தார்கள். அவரும் நம்ப ஊர் போல் லேசாக ஜெயிலில் தலை காட்டி விட்டு நேரே மருத்துவமனைககுத்தான் சென்றார்!

பாங்காக்கிலிருந்து தில்லி வரும்போது பிளைட்டில் பெருமளவு இந்தியர்கள்தான். வசதியாக சீட் கிடைத்ததென்று நான்கு பேர் 'Taash khelenge!' என்று சத்தம் போட்டு சீட்டாட ஆரம்பித்து விட்டார்கள். சூழ்நிலை நாசமாக்கப் பட்டதால் (நம் ஆட்கள்தான் இதில் உஸ்தாது ஆயிற்றே!) தாய் விமானப் பணியாளர்களும் இவர்களுக்கு இது போதுமென்று எதுவுமே serve செய்யாமல் விட்டு விட்டார்கள்! ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

Cliche ஆக இருந்தாலும் சொல்கிறேன். அமரர் மணியன் முதல் இன்று வரை எல்லோரும் சொன்னதுதான் . அங்கு எல்லாவற்றிலும் தென்படும் ஒழுங்கும் நேர்த்தியும் நம் நாட்டில் என்றாவது ஒரு நாள் வருமா என்றால் சந்தேகம்தான்.

சினிமா விரும்பி

Wednesday, November 11, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 2)

பாங்காக்கிலிருந்து சியோல் ஐந்தரை மணி நேரப் பயணம். நமக்கும் தென் கொரியாவுக்கும் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வித்தியாசம். பரப்பளவில் தமிழ்நாட்டை விடச் சிறியது. (தென் கொரியா ஒரு லட்சம் Sq. KM , த.நா. 1.30 லட்சம் Sq.KM). தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடிக்கும் மேல். தென் கொரியாவில் 4.8 கோடி. சியோலில் மட்டுமே ஒரு கோடி. சியோல், இன்சியான் & க்யோங்கி- டோ வைச் சேர்த்தால் (சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போல்) தேசத்தின் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதி! என்னடா, கேப்டன் படம் போல் புள்ளி விவரமா என்று பார்க்காதீர்கள்! போவதற்கு முதல் நாள்தான் நெட்டில் படித்தேன்!

சியோலின் இன்சியான் ஏர்போர்ட்டுக்கு 2009 இல் உலகின் மிகச் சிறந்த ஏர்போர்ட் என்ற விருது கிடைத்திருக்கிறது என்றார்கள். " Incheon International Airport (Seoul, S Korea) has been named World's Best Airport for 2009, in the World Airport Survey results published by Skytrax. "

அனுபவத்தில் தெரிகிறது. நான் ஒரு டெர்மினலில் தவற விட்டு விட்ட tag எதுவும் எழுதாத சிறிய hand baggage ஒன்றை கவுண்டரில் முறையிட்ட 13 நிமிடங்களில் என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்! நம்ப ஊரில் நடக்குமா என்றெல்லாம் கேட்காதீர்கள்! நடக்கும் என்று என்னைப் பொய் சொல்ல வைக்காதீர்கள்!

நவம்பரிலிருந்து மார்ச் வரை குளிர் பிளந்து விடும் என்றார்கள். நல்ல வேளையாக, நான் போன அக்டோபர் கடைசியில், கிட்டத்தட்ட தில்லியைப் போலவே இருந்தது. ஒரு நாள் மழையில் நனைந்ததும் இதமாகவே இருந்தது.

முன்னேறிய நாடுகளின் பட்டியலில் தென் கொரியாவைக் கண்ணை மூடிக் கொண்டு சேர்க்கலாம். மெட்ரோ ரயிலில் எந்த இளைஞனிடமும் வழி கேட்டால் உடனே மொபைலை எடுத்து க்ளிக் செய்து மெட்ரோ மேப்பைப் பார்த்து உங்களுக்கு விளக்கி விடுவான் "பல்லாவரம் தாண்டியதும் குரோம்பேட் வரும், இறங்கிக்குங்க" என்று! வடிவேலு சொல்வது போல் ரோட்டிலேயே முகம் பார்த்துத் தலை சீவிப் பொட்டு வைத்துக் கொள்ளலாம்!

எல்லா டாக்சிகளிலும் கொரியனில் எழுதப் பட்ட GPS system உண்டு. டாக்சியில் மீட்டர், கிரெடிட் கார்டு வசதி, ரசீது கொடுப்பது எல்லாம் உண்டு. (இருந்தாலும் , ட்ராபிக் சிக்னலிலும் மீட்டர் ஓடுவதால், ஓரிரு முறை ட்ராபிக்கை சாக்காக வைத்து மீட்டரில் அதிக ரீடிங் காட்டியது போல் எனக்குத் தோன்றியது.) ஆனால் ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேன் என்கிறது. போன தலைமுறையை விடுங்கள், இளைஞர்களிலேயே ஒரு சிலர் மட்டும்தான் நல்ல சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அப்படி ஒரு ஆள் கிடைப்பது உங்கள் அதிர்ஷ்டம்! மற்றபடி 'NO' என்பதற்கு அழகாக இரண்டு கையையும் குறுக்காக 'X' போல் காட்டுவார்கள் . 'த்ரீ' என்பதற்குக் கட்டை விரலில் இருந்து ஆரம்பித்து மூன்று விரலை ஸ்டைல் ஆகக் காட்டுவார்கள்! ஒரு இளைஞன் "நான் இந்தியாவுக்கு வந்து பூனாவில் ஒரு வருடம் ஆங்கிலம் படித்தேன்" என்றான். பெருமையாக இருந்தது. 'Free Interpretation available' என்று டாக்சியில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் டிரைவருக்கு கொஞ்சூண்டு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் சைகை பாஷையும் மீட்டர் காட்டும் அமௌண்டும்தான்!

'Work Hard,Party Hard' என்ற கொள்கையில் முழு நம்பிக்கை கொண்ட தேசம், குறிப்பாக இளைய தலைமுறை. செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு தீவிர முனைப்பு, கவனம், முழுமை. ஏனோ தானோ போக்கு மருந்துக்கும் கிடையாது. வெளிநாட்டவர்களுக்கு மெனக்கெட்டு உதவும் மனப் பான்மை, இல்லாவிட்டால் நம் நாட்டு இமேஜ் கெட்டு விடுமே என்ற அக்கறை. எனக்குத் தவறாக வழி சொல்லி விட்ட ஒரு பள்ளி மாணவன் மூச்சு இரைக்க ஓடி வந்து தவறை சரி செய்தான்! இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

1910 இலிருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடையும் வரை ஜப்பானின் காலனியாதிக்கத்தில் இருந்தார்களாம் , இரண்டாய்ப் பிளக்காத கொரியா தேசத்தினர் . அதனால்தானோ என்னவோ, ஜப்பானை எல்லாத் துறையிலும் மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் தெரிகிறது. ஏற்கனவே மிஞ்சி விட்டார்கள் என்றே சொல்லுவேன்! 'ஐயோ, என்ன இருந்தாலும் நாம் இருவரும் (வட, தென் கொரியாக்கள்) ஒரே தேசம்தானே, இப்படிப் பிளவு பட்டுக் கிடக்கிறோமே! ' என்ற ஆதங்கமும் பேச்சில் அவ்வப்போது தெரிகிறது.

Internet டின் மேல் அலாதிப் பிரியம் இவர்களுக்கு! எல்லாக் கட்டடங்களின் உச்சியிலும் கம்பெனி பெயருடன் அதே size font இல் Web address ஐயும் எழுதித் தள்ளி இருக்கிறார்கள்!

சியோலில் இருந்து செங்க்வானுக்கு ஒரு மணி நேர பிளைட்டில் சென்றிருந்தோம். பிளைட்டில் நாம் தூங்கும்போது refreshment serve செய்து முடித்து விட்டால் நம் முன்னால் ஒரு குட்டி ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள். " When you were resting, we had served refreshments. Pl. call us when you wake up" என்று. என்ன அருமையான ஐடியா!

தேசத்தின் கட்டுமானத்தில் பெண்களின் பங்களிப்பு நன்றாகவே தெரிகிறது. நகர்ப் புற 'White Collar Job' மட்டுமல்லாமல் நான் போயிருந்த தொழிற்சாலையில் யூனிபார்ம் போட்ட எத்தனையோ பெண் தொழிலாளர்களைப் பார்க்க முடிந்தது.

பிச்சைக்காரர்களே கண்ணில் தென்படவில்லை என்று சொல்வதற்கு இருந்தேன், தொப்பி போட்ட கண் தெரியாத ஒரு வயோதிக தம்பதி பாட்டுப் பாடிப் பிச்சை எடுத்ததைப் பார்க்கும் வரையில். பாட்டும் நம்ப ஊர் சரஸ்வதி சபதத்தின் 'தாய் தந்த பிச்சையிலே.. ' அல்லது ராஜபார்ட் ரங்கதுரையின் 'அம்மம்மா, தம்பி என்று நம்பி.. ' போலத்தான் காதில் கேட்டது! கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக் கொண்டு மெட்ரோவில் ஏதோ ஒரு பெட்டியைத் திறந்து வீடியோ கேசட் போல் ஒரு வஸ்துவை 'பிதாமகன் ' சூர்யா பாணியில் விற்கும் சிலரையும் பார்த்தேன். அப்படி ஒரு ஆளைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக நகர்ந்து விட்டான்.

மற்றவை அடுத்த பகுதியில்.

சினிமா விரும்பி

Saturday, November 7, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 1)

வேலை நிமித்தம் ஆறு நாட்கள் தென் கொரியா ( சியோல் மற்றும் செங்க்வான் ) செல்ல நேர்ந்தது. முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே செல்கிறேன். 'ஐயையோ, டின்னர்ல நாய்க்கறி கொடுத்துடப் போறாண்டா' என்று பயமுறுத்திய பங்காளிகள் உண்டு! வழியில் பாங்காக்கில் இறங்கி காய்கறி விற்கும் படகில் தலைவரைப் போல் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்று பாடப் போகிறாயா என்று கிண்டலடித்த புண்ணியவான்களும் உண்டு. நேர்மையாக சாப்பாடு மற்றும் உடைகளைப் பற்றி அறிவுரை கொடுத்தவர்களும் உண்டு. (இது மிக உதவியாய் இருந்த கதை பின்னால்)

பாஸ்போர்ட்டில் ஒரு சர்தார்ஜியிடம் முதல் முறையாக ' Departed Delhi' என்ற முத்திரையை வாங்கிக் கொண்டு பாங்காக் செல்லும் தாய் விமானத்தில் அமர்ந்தேன். இந்தியன் வெஜிடேரியன் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால் சுமாரான சாப்பாடு கிடைத்தது. (மற்ற பிளைட்களில் அப்படிக் குறிப்பிடாமல் போனதால் வேக வைத்த பீன்ஸையும் முட்டைக் கோசையும் தொண்டையில் திணித்தது தனிக்கதை ! )

பாங்காக் ஏர்போர்ட். திறந்து மூன்றே வருடங்கள் ஆன , உலகின் மிகப் பெரிய ஏர்போர்ட்களில் ஒன்று. 'சுவர்ணபூமி' என்ற சௌந்தர்யமான பெயருக்கேற்ப மிக அழகாகப் பராமரிக்கப் படுகிறது. தூரம் அதிகமென்பதால் லக்கேஜைத் தள்ளிக் கொண்டு நடக்க வசதியாக Travelator எனப்படும் படுக்கப் போட்ட எஸ்கலேட்டர் எக்கச்சக்கமாகப் பரப்பி வைத்திருக்கிறார்கள். சிலர் அதில் நிற்காமல் நடந்து செல்லும்போது சினிமாவில் ட்ராலி ஷாட் போல் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது!

நம்ப ஊர் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த பிரம்மாண்டமான சிற்பம் ஒன்று இருக்கிறது . வாசுகி என்ற பாம்பு, மேரு மலை எல்லாமே தத்ரூபம்! . மலையின் மேல் தாய்லாந்து கிரீடத்துடன் சிவபெருமான் போல மீசையுடன் ஒருவர்; . ஆனால் நான்கு கைகளில்தான் திரிசூலம் , சங்கு , சக்கரம் , வஜ்ராயுதம் எல்லாம் இருக்கின்றன ! கொஞ்சம் தள்ளி நம் கருடாழ்வார் போல ஒரு மிகப் பெரும் துவாரபாலகன் சிற்பம் கொள்ளை அழகு ! பாங்காக்கில் 'Visa on entry' எளிதில் கிடைக்குமென்றாலும் வெளியே போய் விட்டுத் திரும்ப நேரம் மிகக் குறைவாக இருந்ததால் வெளியே போகவில்லை.

டில்லியில் தாய் விமானத்தில் நமஸ்தே போட்டு வரவேற்றார்கள். சரி இந்தியா என்பதால் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்களும் உலகமெங்கும் ஏர் இந்தியா போல் வணக்கம்தான் போடுகிறார்கள் என்று!

பாங்காக்கிலிருந்து சியோல் போன கதை அடுத்த பகுதியில். கொஞ்சம் காத்திருக்கவும்.

சினிமா விரும்பி

Thursday, November 5, 2009

அண்ணலே!

விரதமிருந்தே
வெள்ளையனை
வெளியேற்றிய
காந்தி அண்ணலே!

உன் புகழ் போற்றிப்
படமெடுக்கவே
எங்களுக்கோர்
வெள்ளையன்
தேவைப்பட்டானே!

சினிமா விரும்பி
(இந்த காந்தி ஜெயந்தி அன்று எழுதியது )

Wednesday, October 14, 2009

எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க! நானும் ரவுடிதான்!

எல்லாரும் நல்லாப் பாத்துக்குங்க! நானும் ரவுடிதான்!

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்னுடைய வலைப்பூ http://cinemavirumbi.blogspot.com இல் இன்று வரை Hits 1000 த்தைத் தொட்டு விட்டது.

அவனவன் லட்சக் கணக்கில் Hits வாங்குகிறான்; நீ என்னடா
பெரிய பிஸ்கோத்து ரவுடி என்கிறீர்களா? அவனவன் ரேஞ்ச் அவனவனுக்கு!

(இதற்கும் சில மாதங்கள் முன்பே நான் துவங்கிய Wordpress வலைப்பூ http://cinemavirumbi.tamilblogs.com இல் இன்று வரை என்னால் Counter
இணைக்க முடியவில்லை; அது மட்டும் முடிந்திருந்தால் ஏரியாவில் இன்னும்
கொஞ்சம் பெரிய ரவுடியாகி இருக்கலாம்!)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

சினிமா விரும்பி

Wednesday, August 12, 2009

‘Love Aajkal’ பட விமர்சனம்


பத்தாவது படிக்கும் என் மகளின் தொந்தரவு தாங்காமல் ஒரு மல்டிப்ளெக்ஸில் போய்ப் பார்த்த படம். 2007 இல் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் 'Jab We Met' கொடுத்த இயக்குனர் இம்தியாஸ் , இசை அமைப்பாளர் ப்ரீத்தம், ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்ரமணியம் (அட! நம்ப ஆளுய்யா!) ஆகியோரின் கூட்டணி மீண்டும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு முயற்சி செய்துள்ளனர். முடிவு வெற்றியா? நீங்களேதான் பார்த்து சொல்ல வேண்டும்!

லண்டனில் தன்னுடைய Girl friend தீபிகாவுடன் மகிழ்ச்சியாகப் பிரிகிறார் ஸைப் அலி கான். நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து விட்டுப் பிரிகிறார்கள். கேட்டால் இருவருக்கும் Career முக்கியமாம்!. ஸைப் போக விரும்புவது சான் பிரான்சிஸ்கோ, தீபிகாவுக்கு இந்தியாவில் பழைய நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்கும் தொழிலில் ஆர்வம். பிரிந்த பின்னும் முன்பை விட அதிகமாக தினமும் மொபைல் மற்றும் இன்டர்நெட் மூலம் Chat செய்கிறார்கள். இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று புரிந்து கொள்ள லண்டன் ஹோட்டல் முதலாளியான, சற்றே வயதான சர்தார்ஜி (ரிஷி கபூர்) ஆர்வம் காட்டுகிறார். 'என்னப்பா, சொதப்பல் காரணமா இருக்கே!' என்கிறார். 'காதல்னா தெரியுமா உனக்கு? ' என்று தன் காதல் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக Flash back இல் ஸைப் இடம் சொல்கிறார். ( சிவாஜி, விஜய்யின் ' ஒன்ஸ் மோர்' ஞாபகம் வருதா ?!)

இளம் வயது ரிஷி கபூராக ஸைப் அலி கானே சர்தார்ஜியாக நடிப்பது இயக்குனரின் நல்ல கற்பனை வளம்! அவருக்கு ஜோடியாக ஹர்லீன் கௌர் என்ற சர்தாரிணி பாத்திரத்துக்கு கிஸெல் மொண்டேய்ரோ என்ற ஒரு பிரேசில் இறக்குமதி மாடலை நடிக்க விட்டிருக்கிறார்கள் . பலரும் மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால் பாந்தமாக இல்லை, செயற்கை என்பது என் கருத்து. கடைசிக் காட்சியில் ஒரு இன்ப அதிர்ச்சி! இதே பாத்திரம் வயதான பின் யாரென்று பார்த்தால்..... அட நம்ப நீத்து சிங்!

பீரியட் படம் என்ற பெயரில் Train, Platform எல்லாம் ஒரே அரதப் பழசாய்க் காட்டி இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சிகள்தான் படத்தில் ஜீவனுடன் உள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. லண்டன், சான் பிரான்சிஸ்கோ எல்லாம் picture perfect ஆக இருந்தாலும் அந்தக் கதையுடன் ஒட்ட முடியவில்லை! சொன்னால் எனக்கு வயதாகி விட்டது என்பீர்கள்!

கதையை விட்டு விட்டோமே! இந்தியா வரும் தீபிகாவிடம் அவரது பாஸ் ராகுல் கன்னா (வினோத் கன்னாவின் இன்னொரு- MTV புகழ் மகன்) propose செய்யக் கிட்டத்தட்ட திருமணம் வரை போய் விடுகிறது. ஒரு விளையாட்டாய் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஸைப்புக்கும் (அவ்வப்போது இந்தியா வந்து போகிறார், ஒரு புது வெள்ளைக்காரக் காதலியுடன்) தீபிகாவுக்கும் இதன் விபரீதம் மெதுவாகப் புரிய ஆரம்பிக்கிறது. அதாவது, தீபிகாவுக்குத் தானே அனுபவிக்கும் மரண அவஸ்தை மூலம் புரிகிறது . ஸைப்புக்கு ரிஷி கபூரின் கதையைக் கேட்கக் கேட்கக் காதலின் மகத்துவம் புரிகிறது. கடைசியில் எப்படி 'The End' கார்டு போட்டார்கள் என்பதை வெள்ளித் திரையில் காணவும்! ('நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'மௌன ராகம்' , 'Hum Dil De Chuke Hain Sanam' எல்லாம் நினைவுக்கு வராவிட்டால் நீங்கள் சினிமாவில் LKG யைத் தாண்டவில்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்வேன்!)

ப்ரீதமின் இசையோ, பாடல்கள் படமாக்கப் பட்ட விதமோ 'Jab We Met' க்கு உறை போடக் காணாது! படம் முடியும் போது 'Jab We Met' டைப் போலவே ( நினைவிருக்கிறதா? துள்ளலான Maujjaa hi Maujja) ஒரு அட்டகாசமான பாடலைப் போட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு Large பாப் கார்ன் சாப்பிட்டு முடிக்கும் முன்பே இன்டர்வெல் வந்து விடுகிறது! அது வரை ஒரே ஒரு பாடல்தான்! மற்ற ஐந்தாறு பாடல்கள் இரண்டாம் பகுதியில்தான்! நடு நடுவே காதலைப் பற்றி முனைவர் பட்டம் பெறப் போகிறாரா இயக்குனர் என்பது போல் வசனங்களில் ஒரே தியரி மயம் !

தீபிகா எதோ காலேஜ் டிராமாவில் நடிப்பது போல் உயரமாய் வந்து போகிறார். ஹிந்தி பேசும்போது ஹேமமாலினி காதில் கேட்கிறார்! ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கடைசிப் பாடலில் glamour கொஞ்சம தாராளம்தான் !

ஒன்றிரண்டு பாடல்கள், நடனங்கள் (உதாரணம்: We Twist, We Twist), இளைய மற்றும் வயதான சர்தார்ஜிகளான ஸைப் மற்றும் ரிஷி கபூரின் ஆழமான நடிப்பு , நெஞ்சைப் பிராண்டும் ஒரு அழுத்தத்துடன் 'காதல் உன்னதமானது. எல்லாத் தலைமுறைக்கும் பொதுவானது' என்று நெத்தியடியாய் சொன்ன விதம் இவற்றுக்காகக் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்!

சினிமா விரும்பி

Wednesday, June 17, 2009

'Rocket Science!'

___________________________________________________
Nowadays, it is fashionable for people to
say 'That's no Rocket Science!' whenever
they want to say that a certain subject
is not all that difficult. They overdo it
so much that I feel like shouting at them :

'You idiot! Rocket Science itself is no Rocket Science!'

Cinema Virumbi

_____________________________________________________________

Friday, May 29, 2009

பன்றிக் காய்ச்சலும் காட்டாமணக்கு இலையும்!

(பன்றிக் காய்ச்சலும் துளசி இலையும் என்ற நேர்மையான பதிவிட்டவர் மன்னிக்கவும்!)

பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்கக் காட்டாமணக்கு இலை மிகச் சிறந்தது என்று எங்கோ படித்தேன்! நாலு காட்டாமணக்கு இலையை நெய்யில் நல்ல பொன்னிறமாக வதக்கி தினம் மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்பு கொடுத்து வந்தால் ஜன்மத்துக்குக் காய்ச்சலே வராதாம்................................ பன்றிக்கு!

சினிமா விரும்பி

Wednesday, May 13, 2009

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு


நண்பர் ஒருவர் வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை எனக்கு அனுப்பியிருந்தார். தமிழ் மொழிபெயர்ப்பை சற்று முயற்சித்துப் பார்த்தேன்!

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு
(ஒரிஜினல் பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை; தெரிந்தவர்கள் சொல்லவும்)

Hum Mein Aur Tum Mein Koi Baat Nahin Hai Lekin
Log Tho Jhoote Fasaane Bhi Ghada Karthe Hain
Milne Julne Mein Koi Harj Nahin Hai Aisa
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Mera Dil Dekh Meri Shaklo-Shabahat Pe Na Ja
Sooratein Rang-e-Zamaana Se Badhal Jaati Hain
Mai Karoon Tum Se Mohabbat Ki Koi Baat Yaqeen Math Karna
Mu Se Bekaar Ki Baatein Bhi Nikal Jaati Hain
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Ek Belaus Mohabbat Ko Yeh Duniyawaale
Husn-e-Masoom Ka Izhaar-e-Mohabbat Samjhe
Meri Baaton Ke Us Andaaz Ko Jaana Ikraar
Meri Khamosh Tabiyath Ko Nadamath Samjhe
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

Tu Mere Paas Sahi Phir Bhi Tu Mera Tho Nahin
Waqt Ne Tujh Ko Mere Paas Bihta Rakhkha Hai
Tere Dil Mein Tho Koi Aur Basa Hai Shayad
Chhodo Yeh Baat Ke Is Baat Mein Kya Rakhkha Hai
Log Dil Ko Nahin Chehron Ko Pada Karthe Hain

பெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்றி
என்னிடமோ ஆயினும்
வெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ ?
சந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

என் மனதைப்பார் , முகவெட்டை அல்ல !
முகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே !
உன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே !
வெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

ஊமைக்காதல் ஒன்றினை இவ்வுலகோர்
அழகி (ஆண் மயக்கி ?) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;
நான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;
என் மௌனத்தை சம்மதம் என்று கதைத்தார்;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

நீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே !
காலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;
(எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள !)
உன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலும் !
விட்டுத் தள்ளு ! காதல் எனதுதானே ! உனக்கென்ன நஷ்டம் !
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார் !

சினிமா விரும்பி

Friday, May 1, 2009

வலைப் பதிவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

நண்பர்களே,

என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நண்பர்கள் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

நன்றி!

சினிமா விரும்பி

Monday, April 6, 2009

' எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை) '

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

Saturday, April 4, 2009

'கால் சென்டர் கலாசாரம்!'

கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை! சொல்லப் போனால் அவர் சொன்னது கொஞ்சம், எவரையும் புண்படுத்த வேண்டாமென்று சொல்லாமல் விட்டது மிக அதிகம்!

கால் சென்டர்களை ஆதரிப்பவர்களின் தரப்பு வாதம் என்னவென்றால்
“ எந்த ஒரு நன்மையும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது கூடவே நாலு தீமையும் நுழையத்தான் செய்யும் ! நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர ஒரேயடியாக அந்த நன்மைக்கே முட்டுக்கட்டை போடுவது கடைந்தெடுத்த பத்தாம் பசலித் தனம் !” ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ’ வரவேற்க வேண்டியவையே என்று நம் பெரியவர்களே சொல்லவில்லையா ?’ “Work hard, Party hard! (கடினமாக உழை ! மிகக் கடினமாக பார்ட்டி கொண்டாடு !) என்ற கொள்கை உடையவர்கள் இந்தத் துடிப்பு மிகு இளைஞர்கள் ! இதில் என்ன தவறு? இரண்டு மூன்று தலைமுறை பழசாய்ப் போனவர்களெல்லாம் பொறாமையில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக நியாயம் போல் தோன்றும் இந்த வாதங்களில் பூசி மெழுகப்படும் விஷ(ய)ங்களை நாம் கூர்ந்து நோக்க வேண்டும் ! வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே , தன் தந்தையின் மாத சம்பளத்தை விட அதிகம் வாங்கும் ஒரு பையனோ பெண்ணோ , சற்று மிதப்புடன் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப் போய் விடக்கூடிய ஒரு சில்லறைக் குற்றம்தான் ! ஆனால் , வார இறுதியில் கொண்டாடப் படும் week end பார்ட்டிகள்தான் இந்த BPO க்களின் மாபெரும் சாபக்கேடு ! சிகரெட் , மது (பொதுவாக பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம் எனக் கொள்க !) என்றால் இயல்பாகவே நம் பெண்களுக்குள்ள அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம் அத்தனையையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசிய புண்ணியத்தை இந்தக் கால் சென்டர்கள் தேடிக் கொண்டுள்ளன ! இந்திய (குறிப்பாகத் தமிழ் ) சமூகத்தில் கடந்த பல நூறு ஆண்டுகளாக நெறிகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட சீரழிவை , நான்கைந்து வருடங்களிலேயே அசுரத்தனமாக மிஞ்சிக் காட்டிய பெருமையும் இவற்றையே சாரும் ! புகை , பீர் மற்றும் ரம் , விஸ்கி போன்றவை தண்ணீர் போலப் புழங்கும் ஒரு சூழலில் , ஆண்கள் பெரும்பாலானோர் தன் வயம் இழந்த சூழ்நிலையில் , திருமணம் ஆகாத பெண்கள் வளைய வருவது மேல்தட்டு வர்க்கத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ! என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள மத்யமர்களுக்கு எந்நாளும் ஒத்து வராது !

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியது போல் ‘நம் ஆட்களுக்கு அளவாகக் குடிக்கவும் தெரியாது !’ இன்றுதான் உலகின் கடைசி நாள் என்பது போல் அரக்கத் தனமாகக் கொண்டாடப் படும் இந்த வார இறுதிப் பார்ட்டிகளில் பெண்கள் பலரும் குடித்து விட்டு ‘அவுட் ’ ஆகி விழுவதும் , ‘கால் சென்டரில் இதெல்லாம் சகஜமப்பா !’ என்று சில தடியன்கள் அவர்களை ‘க்வாலிஸ் ’ வண்டியில் தூக்கி வந்து வீட்டில் பெற்றோரிடம் நடு நிசியில் தள்ளி விட்டுப் போவதும் எத்தனையோ வீடுகளில் நடக்கின்றன ! காலையில் அதே பெண் எழுந்து , தேள் கொட்டிய திருடனாய் இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் தன் உரிமைகளைப் பற்றி ஆவேசமாய் சர்ச்சை செய்வதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே ! பெண்களின் ஒழுக்க உணர்வு தளர்ந்தால் சமூகம் குட்டிச் சுவராக சில பத்தாண்டுகளே போதுமே ! பொருளாதார மேதைகள் நமக்குக் காட்டும் ரசவாதமான 10% GDP வளர்ச்சிக்கு நாம் கொடுத்துத் தொலைக்க வேண்டிய விலை இது என்று புறந்தள்ளி விட்டுப் போக முடியுமா பண்பாட்டின் இந்த அதல பாதாளச் சீர்கேட்டை ? நாளை சமூகத்தை மீட்டெடுக்க எத்தனை மகான்கள் முயன்றாலும் முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது போன்ற சமுதாயச் சிக்கல்களுக்கெல்லாம் ‘RESET’ பட்டன் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லையே !!!

சினிமா விரும்பி

(வடக்கு வாசல் நவம்பர் 2007 இதழில் சில சிறிய மாற்றங்களோடு வெளி வந்தது)

'நடிகை பாவனாவைப் பற்றி ஒரு 'பாவ்லா' கவிதை!'

தாரகையே பாவனா,
உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

சினிமா விரும்பி

Friday, April 3, 2009

'அரிச்சந்திரனின் செல்பேசி'

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”

சினிமா விரும்பி

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

' பாரதி என்றொரு கவிஞன் '




சமீபத்தில் ஒரு இணையதளத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி சில விமரிசனங்கள் எழுதப் பட்டிருந்தன. நான் எழுதிய பதில்கள் அதே தளத்தில் உடனே வெளியிடப்பட்டன. அவை இதோ கீழே:

பாரதி என்ற ஈடிணையற்ற கவிஞன் ஆங்கிலேயரை எதிர்க்காமல் சுக வாழ்வு கண்டிருக்கலாம். ராவ் பஹதூர் பட்டத்தை வாங்கிக் கொண்டு பங்களா, கார் என்று இக பர சுகங்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க பிடுங்கித் தின்ற வறுமையையும் இறுதி ஊர்வலத்தில் இருபது பேருக்கும் குறைவாய் இருந்த அவலத்தையும் தவிர்த்திருக்கலாம். ஏன், நல்ல மருத்துவம் பார்த்து அந்தப் பாழாய்ப் போன மரணத்தையே கூட இன்னும் சில பத்தாண்டுகள் தள்ளிப் போட்டிருக்கலாம். தன் ஒரே பெண் குழந்தையின் திருமணத்துக்குக் கூட சேகரித்து வைக்காத பிழைக்கத் தெரியாத மூடனாய் இருந்திருக்க வேண்டாம்! யாராவது கேட்டால் எனக்கு தேச சுதந்திரம் முக்கியமல்ல! அதை விட முக்கியம் சமுதாய மறுமலர்ச்சி அதற்காகப் போராடுகிறேன் என்று சொல்லி ஆங்கிலேயரிடமிருந்து சாமர்த்தியமாகத் தப்பியிருக்கலாம். சுதந்திரம் கிடைத்த பிறகும் தன் கவித்திறனைக் கொண்டு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கலாம். பழைய ஆவணங்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தால் எந்த வரலாற்று நாயகனும் அப்பழுக்கற்று வெளி வருவது கடினம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி ஒருவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதை ஒரு யுத்த தந்திரமாகத்தான் கொள்ள வேண்டும். அனைவருமே சிறை சென்று மடிந்து இயக்கமும் மண்ணாய்ப் போக வேண்டுமென்ற அவசியமில்லை. மகா கவிஞன் மீது சுலபமாக சுட்டு விரலை நீட்டுவோர் தானோ தன் மூதாதையரோ சுதந்திர வேள்வியில் என்ன பங்கேற்றோம் என்று சற்றே சிந்திக்கட்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க , பாரதியின் பாடல்களில் உள்ள விடுதலை வேட்கையையோ அவை தமிழரிடம் ஏற்படுத்திய யுகப் புரட்சியையோ இந்த ஆவணங்கள் எள்ளளவும் குறைக்கப் போவதில்லையே!

**************************************************************************

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியின் வகுப்பினரிடம் இயல்பாகவே இருந்த வடமொழி வாஞ்சை பாரதியிடமும் இருந்திருந்தால் அது பஞ்சமா பாதகம் இல்லை! அது தமிழுக்கு அவர் செய்த துரோகமும் இல்லை! மேலும் , பாரதி போன்ற ஒரு கவிஞனுக்குத் தாய்மொழி தவிர நான்கைந்து மொழிகளில் பரிச்சயமும் புலமையும் இருப்பது சகஜம்தான். அப்படி இல்லையென்றால்தான் அது அதிசயம்! பாரதி வாரணாசி, பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ’ என்று ஆணித்தரமாக உரைத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

*************************************************************************
நான் முன்பே சொன்னது போல் நிஜ மாந்தர்கள் சற்றே ஏறக்குறையத்தான் இருப்பார்கள். நாம் விரும்பும் சகல விதமான கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த ஒரு கவிஞன் வேண்டுமென்றால் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்!

**************************************************************************

ஜஸ்டிஸ் கட்சியோ அல்லது அதற்கு முந்தைய பிராமணரல்லாதார் பிரகடனமோ முதல் முதல் துவங்கப்பட்ட போது அதே இயக்கம் பின்னாளில் திராவிட இயக்கமாகப் பரிணாம வளர்ச்சியுற்று சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இவ்வளவு மகத்தான வெற்றிகளைப் பெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, பாரதியைப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயரை ஆதரிக்கும் இந்த இயக்கம் விரைவில் மங்கி விடும் என்றும் சுதந்திரப் போராட்டம்தான் நிலைத்து நிற்கும் என்றும் மனப்பூர்வமாக நம்பினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது அவர்களின் கணிப்பு . அவ்வளவுதான்! கணிப்புகள் தவறாகலாம்! இதில் பாரதியை மட்டும் தனிமைப் படுத்தி அவர் தலையை மட்டும் ஏன் ஐயா உருட்டுகிறீர்கள்?!

**************************************************************************

பாரதி போன்ற உணர்ச்சிப் பிழம்பான படைப்பாளிகள் பல விஷயங்களில் எஃகு போன்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதில்லை! குறிப்பாக இந்தப் பெண்ணியம் சார்ந்த சிக்கலான விஷயங்களில் பாரதி ஒரு கால கட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகவும் பின்னாளில் சற்றே நடைமுறைக்குகந்த மாதிரியும் சிந்தித்திருப்பார் போல் உங்கள் கட்டுரையிலிருந்து தெரிகிறது. முழுக்க முழுக்க முரண்படாத வரையில், என்னைப் பொறுத்தவரை இது மன்னிக்கக் கூடிய சிறு குறைபாடுதான். அந்த நாளிலேயே ஒரு தமிழ்க் கவிஞன் பெண் விடுதலையின் பல்வேறு பரிமாணங்களை இவ்வளவு ஆழமாக ஆராய்ந்திருக்கின்றானே என்ற பிரமிப்புதான் எனக்கு ஏற்படுகிறது! அதை விடுத்து ‘ஆஹா பார்த்தீர்களா பாரதியின் போலித்தனத்தை?’ என்பது போன்ற தலைப்பும் வெறுப்பைக் கக்கும் சொற்பிரயோகங்களும் கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கணிசமாகக் குறைக்கின்றன.

சினிமா விரும்பி

' சனிமூலை! '

நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:

சனிமூலை,

வாசகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!

http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/

சினிமா விரும்பி

' இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா! (ஒரு கற்பனை உரையாடல்) '

( சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில் பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)

அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி ‘India Shining’ னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!

வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம் ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!

அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில் இருந்த ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி … விடிஞ்சுரும்!

ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!

வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!

ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.

அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .

வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!

வெங்கையா நாயுடு : அது மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம் வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண் , கோவிந்தாச்சார்யா எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!

அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!

சுஷ்மா ஸ்வராஜ்: கட்சிக்குள்ளே பெண்ணுரிமையே இல்ல! என்னைத் தலைவியா மத்த சிறுசுகள் ஏத்துக்கிட்டு எல்லாப் பெருசுங்களையும் ஓரங்கட்ட மாட்டுறாங்களே!

அருண் ஜெட்லி: எல்லாரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விக்கிலீக்ஸ் காரன் கிட்ட பேட்டி கொடுத்துட்டு வந்து கோதாவில் இறங்கறேன்!

ஆர். எஸ். எஸ்.: இவங்களை எல்லாம் அமுக்கத்தான் நாம நிதின் கத்கரியை உள்ள புகுத்தினோம்! இப்ப என்னடான்னா மொத்த கோஷ்டி தமிழ்நாடு காங்கிரசையும் மிஞ்சிடும் போலிருக்கு!

அத்வானி: ‘கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! 2009 க்கு என்னதான்யா வழி?!

யஷ்வந்த் சின்ஹா: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ….

வெங்கையா நாயுடு : …… ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !

எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!

சினிமா விரும்பி

‘Dr CNA பரிமளம்’

பள்ளி நாட்களில் மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ‘Dr CNA பரிமளம் MBBS’ என்ற போர்டு தொங்கும் ஒரு எளிமையான கிளினிக்கைப் பார்த்ததுண்டு. டாக்டரை நேரில் பார்க்கா விட்டாலும் ‘அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனுக்கு இவ்வளவு ஆடம்பரமற்ற கிளினிக்கா?’ என்று நானும் நண்பர்களும் வியந்ததுண்டு. சமீபத்தில் , முதுமையில் , நோயின் உபாதை தாங்க முடியாமல் அவர் தன் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிர் நீத்தார் என்று படித்த போது மனம் வலித்தது. நிச்சயமாக வறுமை ஒரு காரணமே இல்லை என்றாலும் MGR இன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் ‘ தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று.. ‘ பாடல் நினைவுக்கு வந்தது:

‘நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்;
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார்;
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்;
தம் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையைத் தந்தார்! ‘

சினிமா விரும்பி

' காதோடுதான் நான் எழுதுவேன்! '

சமீபத்தில் ஒரே நாளில் இரண்டு காது (ஒரே நபருடையதல்ல! தனித் தனி!) சம்பந்தப் பட்ட செய்திகள் idlyvadai.blogspot.com ல் வெளி வந்தன.

‘சென்னையில் துப்புரவுத் தொழிலாளியின் காது கிழிபட்டது &
பந்தயத்தில் தோற்ற பின் ரூ 50/- தராததால் நண்பரின் (!) காதைக் கடித்துத் துப்பிய வாலிபர்’

இதற்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:

இப்படியும் இருக்குமா?
சே! சே! இருக்காது !
இதில் ஏதோ சூது வாது கீது!
இதைப் படிப்பவர் மனம் நிஜமாகவே உருகாது?
அமைதி விரும்பும் தமிழ்நாட்டுக்கு இது அடுக்காது!
ஐயோ! இந்தக் கொடுமையை எல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறதே என் காது!
ஞாபகம் வருதே தினம் தூங்கும் போது!
தெலுங்குக்காரர் யாராவது சொல்லக் கூடாதா? ‘இதி நிஜம் காது'
பிரச்னையைத் தீர்க்க யாராவது போனார்களா தூது?
சரி, இப்போ எப்படியிருக்கு கிழிஞ்ச ரெண்டு பேர் காது?

சினிமா விரும்பி

‘ஹோட்டல் மாமியா Deluxe A/C'

rprajanayahem.blogspot.com ல் சமீபத்தில் சில மாற்றங்களுடன் நான் இட்ட ஒரு பின்னூட்டம் :

சின்ன வயசில் (1971-72 இருக்கும் ), ஒரு நாள் இரவு, நானும் அப்பாவும் காலாற உஸ்மான் ரோடு, பாண்டி பஜார், ராஜகுமாரி தியேட்டர் என்று நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: ” வாடா, ஹோட்டல்ல சாப்பிடலாம்”. நான் சொன்னேன்: ” அப்பா, நடிகர் A. கருணாநிதி ‘ஹோட்டல் மாமியா’ என்று ஒன்று இங்கேதான்பா எங்கேயோ நடத்தறார். இந்த வாரம் குமுதத்தில் பார்த்தேன்” . கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தேடிப் பிடித்துப் போனால், வாசலில் கலர் கலர் சாக் பீஸால் போர்டு போட்டிருந்தது : “கைம்மா உறுத்தல், ரஷ்ய உள்ளான் , காடை, கௌதாரி” என்று இன்னும் என்னென்னவோ! . அப்பா என்னை அடிக்காத குறைதான்! ” ஏண்டா நாசமாப் போறவனே! பேரப் பார்த்தாலே தெரியல, மிலிடரி ஹோட்டல் என்று?”. அப்புறம் ஒரு வழியாக ‘கீதா கபே’யோ ஏதோ ஒன்றில் மசால் தோசை முழுங்கி விட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! அந்த ரஷ்ய உள்ளானின் தலைவிதி , தமிழ்நாட்டில், தருமமிகு சென்னையில், தி.நகரில் வந்து மண்டையைப் போட வேண்டுமென்று! அதையோ, அதன் சந்ததியினரையோ , கபளீகரம் செய்யும் வாய்ப்பு பின்னாளில் கிடைக்காமலே போயிற்று! கெடுத்தார் அப்பா!

சினிமா விரும்பி

நேருவின் பேரனின் மகன்

அரசியலில் சிலர் சில சமயம் செய்வதறியாமல் என்னென்னவோ செய்து விட்டு மேலும் மேலும் தவறான பாதையிலேயே சென்று விடுகிறார்கள்! சமீபத்திய உதாரணம் வருண் ஃபிரோஸ் காந்தி! இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் காந்தி, நேரு என்றால் தெய்வமாகக் கும்பிடும் பாரம்பரியம் பல்லாயிரம் குடும்பங்களில் உண்டு! துரதிர்ஷ்டவசமாக, 1980 இல் பிறந்த இவருக்கு இது தெரியாமலேயே போயிற்று! நேருவின் பேரன் என்ற ஒரே வாஞ்சைக்காக சஞ்சய் காந்தி செய்த நெருக்கடி காலக் கொடுமைகளையெல்லாம் 1977 இலும் 1980 இலும் அறவே புறந்தள்ளத் தயாராயிருந்தது கிட்டத் தட்ட முழு தென்னிந்தியாவும்! இன்றைய காங்கிரஸ் தலைமையுடன் ஒத்து வரா விட்டாலும் பரவாயில்லை, இவர் இந்திரா (போனால் போகிறதென்று சஞ்சய்!) பெயரால் ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி நடத்தினால் கூட போதும்! நாளடைவில் மேலே வரலாம், மக்கள் வாய்ப்பளிப்பார்கள்! அதை விட்டு விட்டு ‘ நேருவின் பேரனின் மகன், இந்திராவின் பேரனா இப்படி?’ என்று பலரையும் முகம் சுளிக்க வைப்பதில் என்ன லாபம்? இவர் என்னதான் தலைகீழே நின்றாலும் இவரை ஒரிஜினல் BJP யாக யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! யாராவது இவருக்கு எடுத்துச் சொல்வார்களா?!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...